ஊட்டி : அம்பேத்கர், பெரியார், திருவள்ளுவர் சிலைகளுக்கு காவி பூசி அவமதிக்கும் மதவெறி அமைப்புகளை தடை செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஊட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழகத்தில் சமீபகாலமாக திருவள்ளுவர் மற்றும் தந்தை பெரியாருக்கு காவி சாயம் பூசுவது போன்ற சம்பவங்கள் நடந்தது. இந்நிலையில் அண்மையில் சட்டமேதை அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு திருநீறு, குங்குமம் அணிந்து காவி நிறத்தில் அம்பேத்கர் படம் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் திருவள்ளுவர், பெரியாரை தொடர்ந்து புரட்சியாளர் அம்பேத்கருக்கு காவி, திருநீறு, குங்குமம் இட்டு அவமதிக்கும் சனாதன சங்பாிவார் கும்பலை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி ஏடிசி., திடலிலும் ஆர்ப்பாட்டம்நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் மண்ணரசன், மாவட்ட மகளிர் விடுதலை இயக்க அமைப்பாளர் காஞ்சனா, சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் கட்டாரி, சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலாளர் வக்கீல்முனிரத்தினம், கோல்ட்ரஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தொடர்ந்து அம்பேத்கர், பெரியார், திருவள்ளுவரை அவமதிக்கும் கும்பலை கைது செய்ய வேண்டும். வரலாற்றைத் திரித்து வன்முறையை தூண்டும் மதவெறி அமைப்புகளை தடை செய்ய கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மகேசன், பாபு, சிலம்பரசன், கமல்ராஜ், பெரியசாமி, தீபக், நகர செயலாளர்கள் துயில்மேகம், இஸ்மாயில், அப்பாஸ், கரிகாலன், மாவட்ட பொறுப்பாளர்கள் ரபி, மதிவாணன், தீனா, ஜான்சன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்….