தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை வட்டத்தில் தற்போது கோடை பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை தங்கு தடையின்றி கொள்முதல் செய்வதற்காக இரும்புதலை, ரெங்கநாதபுரம், பொன்மான்மேய்ந்தநல்லூர், சாலியமங்களம், கோவத்தகுடி, கொத்தங்குடி, நிம்மேலி, காந்தாவனம், ராராமுத்திரகோட்டை உள்பட பல பகுதிகளில் உள்ள அரசு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வந்தன. இந்நிலையில் அம்மாப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கொள்முதல் செய்வதற்காக கொண்டு வந்த நெல்மணிகளை கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்து காத்திருக்கின்றனர். இந்த மழையால் நெல்மணிகள் நனைந்து சேதமாகும் நிலை உள்ளது. அதேபோல் அறுவடை செய்யப்பட்ட நெல்களை விவசாயிகள் சாலையில் போட்டு உலர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சாலியமங்களம், அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் நெல் உலர்த்தும் தளம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். நெல் உலர்த்தும் தளம் இல்லாததால் அறுவடை செய்யப்பட்ட நெல்களை சாலையில் போட்டு உலர்த்த வேண்டிய நிலை உள்ளது. சாலியமங்கலத்தில் நெல் உலர்த்தும் தளம் அமைத்துக் கொடுத்தால் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்கள் அனைத்தும் உலர்த்துவதற்கு விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். தற்போது நெல் கொள்முதல் நிலையம் பகுதியிலேயே விவசாயிகள் நெல்களை உலர்த்தி வருகின்றனர். இதற்காக அறுவடை செய்யப்பட்ட நெல்கள் அனைத்தும் குவியல் குவியலாக போடப்பட்டுள்ளது. எனவே நெல் உலர்த்தும் களம் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.