ஈரோடு,ஜூன்15: அனைத்து துறை சீருடைகளும் விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று கைத்தறித்துறை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். ராயன், காட்டன் துணிகளின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் விசைத்தறியாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், இதற்கு தீர்வு காணும் வகையில், ஒன்றிய அரசு ஏற்றுமதிக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.
மேலும் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான இலவச சீருடைகள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது போல அனைத்து அரசு துறைகளுக்கான சீருடை துணிகளையும் விசைத்தறிகளில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இது குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்கும்படி கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா கைத்தறிதுறை உதவி இயக்குநருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இது தொடர்பாக கைத்தறித்துறை உதவி இயக்குநர் சரவணன் தாக்கல் செய்துள்ள பதிலளிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடையில் கேஸ்மெண்ட் ரக சீருடை துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. மேலும் விசைத்தறியாளர்களின் கோரிக்கைபடி அனைத்து துறையின் சீருடைகளையும் விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்வது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.