சென்னை: முன்னாள் அமைச்சர் காமராஜர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்வதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ந்த புகாரில் முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் திருவாரூரைச் சேர்ந்த சந்திரகாசன், கிருணாமூர்த்தி, உதயகுமார் உள்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.44 கோடி சொத்து சேர்த்துள்ளதாக காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2015 ஏப். முதல் 2021 31 வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக அதிகாரிகள் கூறியுன்னர். உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சொத்துக்களை வாங்கி குவித்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது. காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக 500% சொத்து குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட 49-க்கு மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மன்னார்குடியில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு முன் அதிமுக தொண்டர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நிர்வாகிகள் காமராஜ் வீட்டின் முன் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்துங்கள் என அவர் கூறியுள்ளார். …