அதிமுக பொதுக்குழு வழக்கு விவகாரத்தில் எடப்பாடி கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் விளக்க மனு..!

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முற்படுவதால், அவரது கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் விளக்க மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்ட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் பி.வைரமுத்து, நத்தம் விஸ்வநாதன், பெஞ்சமின் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேற்கண்ட விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி உச்ச நீதிமன்றத்தில் நேற்று இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,  ‘அதிமுக பொதுக்குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் மீது தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் கட்சிப் பணிகள் தொய்வடைந்துள்ளது.  அதனால் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று தனியாக விளக்க மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  ‘அதிமுகவை பொருத்தவரையில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் குறித்து இன்னும் எந்த ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில், தேர்தல் ஆணையத்தை இந்த வழக்கில் மனுதாரராக சேர்க்க முடியாது. மேலும் இதற்கு முன்னதாக அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் பிரதிநிதியாக இல்லாத நிலையில் தற்போது இந்த மேல்முறையீட்டு மனுவில் தேர்தல் ஆணையத்தை புதிதாக சேர்க்க கோரிக்கை வைக்க முடியாது. அதிமுக பொதுக்குழு வழக்கில் நீதிமன்றத்தை எடப்பாடி பழனிசாமி தவறாக வழி நடத்த முற்படுகிறார். எனவே எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கானது வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வரும்போது, எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த இடைக்கால மனு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த விளக்க மனு ஆகியவை குறித்து உச்ச நீதிமன்றம் விரிவாக விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது….

Related posts

ஆந்திராவில் ஆட்சி மாற்றம் எதிரொலி; சுரங்கத்துறை முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் தீ வைத்து எரிப்பு: கார் டிரைவர்கள் சிக்கினர்

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

சூர‌ஜ் ரேவண்ணாவுக்கு 18ம் தேதி வரை காவல்