நாகர்கோவில்: நாகர்கோவிலில் அதிமுக நிர்வாகி மகனை கடத்தி கத்தியால் குத்தி கொன்றுள்ளனர். நான்கு வழிச்சாலை அருகே புதைக்கப்பட்ட உடலை இன்று காலை தோண்டி எடுத்தனர். நாகர்கோவில் சியோன் தெருவை சேர்ந்தவர் பி.டி.செல்லப்பன் (56). குமரி மேற்கு மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும், குலசேகரம் அருகே உள்ள அயக்கோடு ஊராட்சி தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது மகன் லிபின்ராஜா (23). ஆந்திராவில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் முதலாண்டு படித்து வந்தார். கடந்த 4ம் தேதி இரவு நண்பர்களை சந்திக்க சென்ற லிபின்ராஜா, திரும்பி வர வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. லிபின்ராஜாவின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து அவரது தந்தை பி.டி. செல்லப்பன் நேசமணிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கும், லிபின்ராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. எனவே அந்த முன் விரோதத்தில், லிபின்ராஜாவை கடத்தி சென்று இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. லிபின்ராஜாவின் செல்போனுக்கு வந்த அழைப்புகளின் அடிப்படையில் விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் நேற்று லிபின்ராஜாவின் தந்தை பி.டி. செல்லப்பனுக்கு செல்போனில் பேசிய நபர், உங்கள் மகனை கொலை செய்து, பழவூர் அருகே நான்கு வழிச்சாலையையொட்டி புதைத்து விட்டனர் எனக் கூறினார். இது குறித்து பி.டி. செல்லப்பன் நேசமணிநகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தனிப்படை போலீசார் பழவூர் விரைந்தனர். சம்பந்தப்பட்ட இடத்தை கண்டறிந்து தோண்டினர். சுமார் 3 அடி கூட தோண்டப்படாத நிலையில், உடல் புதைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. தாசில்தார் மற்றும் வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளும் வந்திருந்தனர். இரவு நேரமாகி விட்டதால் பிரேத பரிசோதனை நடத்த முடியாது என்பதால் உடல் வெளியே எடுக்கப்பட வில்லை. இன்று காலை உடல் தோண்டி எடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு அரசு டாக்டர் வரவழைக்கப்பட்டு இருந்தார். பின்னர் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. வயிற்றில் கத்தியால் குத்தி குடல் சரிந்து லிபின்ராஜா இறந்ததாக கூறப்படுகிறது. ெகாலையாளிகள் யார்? என்ற விபரம் இன்னும் முழுமையாக தெரியவில்ைல. சம்பவத்தன்று இரவு பைக்கில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, ஏற்கனவே இருந்த முன் விரோத அடிப்படையில் அங்கு வந்த கும்பல் லிபின்ராஜாவை கடத்தி கத்தியால் குத்தி கொன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தலைமறைவாக உள்ள 2 பேர் மீது போலீசார் சந்தேகப்பட்டு அவர்களை தேடி வருகிறார்கள்….