சென்னை: தமிழகம் முழுவதும் 32,000க்கும் மேற்பட்ட நியாய விலை கடைகளை கூட்டுறவு சங்கங்கள் நடத்தி வருகின்றன. அவை பெரும்பாலும் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை மற்றும் தொடக்க கூட்டுறவு நுகர்வோர் சங்கங்களின் சார்பாக நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2014-15ம் ஆண்டு வரையில் கூட்டுறவு சங்கங்களுக்கு பொது விநியோக திட்ட மானியம் 100% வரையில் வழங்கப்பட்டு வந்தது. அதன்பின்னர், ஒவ்வொரு ஆண்டும் கூட்டுறவு சங்கங்களால் அனுப்பப்படும் மானிய முன்மொழிவு, கூட்டுறவு தணிக்கை துறை இணை பதிவாளர், துணை பதிவாளர் ஆகிய அலுவலக அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு, பெரும்பாலான செலவினங்கள் குறைக்கப்பட்டு அந்த முன்மொழிவு, கூட்டுறவு சங்க பதிவாளர் மூலமாக அரசிற்கு பரிந்துரைக்கப்படும். அவ்வாறு பரிந்துரைக்கப்படும் முன்மொழிவு தொகை 2015ம் ஆண்டிற்கு பிறகு முழுமையாக மானிய தொகை வழங்கப்படாமல் 25% முதல் 35% வரை குறைத்து வழங்கப்படுகிறது. உதாரணமாக, கடந்த 2018-19ம் ஆண்டிற்கு கூட்டுறவு சங்கங்களால் முன்மொழிந்த மானிய தொகையில் 63 சதவீதம் மட்டுமே வழங்கி மீதம் 37 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டது. 2019-20ம் ஆண்டிற்கான மானிய முன்மொழிவு தொகையில் வெறும் 34 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டது. மீதம் உள்ள தொகை இன்னும் நிலுவையில் உள்ளது. அதன்படி கடந்த 2019-20ம் ஆண்டிற்கு மட்டும் தமிழகம் முழுவதும் ரூ.400 கோடிக்கு மேல் மானியம் வர வேண்டிய நிலையில், வெறும் ரூ.150 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. மீதம் உள்ள தொகை இன்று வரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்கி, கூட்டுறவு நிறுவனங்களை காத்திட வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக, கடந்த அதிமுக ஆட்சியில்தான் இதுபோன்று மானியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் செயல்படும் மகளிர் கூட்டுறவு பண்டக சாலை மற்றும் வடசென்னை டாக்டர் அம்பேத்கர் கூட்டுறவு பண்டக சாலை தமது ஊழியர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்க முடியாத அவல நிலையில் உள்ளதாக ஊழியர்கள் கூறுகின்றனர்.எனவே, கூட்டுறவு நிறுவனங்களை மீட்க தமிழக முதல்வர் மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் தலையிட்டு 100 % மானியம், கூட்டுறவு பண்டக சாலைகளுக்கு வழங்க வேண்டும் என்று அனைத்து கூட்டுறவு நியாய விலை கடை பணியாளர்கள் சார்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்….