சென்னை: அதிமுக வன்முறை தொடர்பாக பழனிசாமி ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் சிபிசிஐடி போலீசார் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் முன்பு ஏற்பட்ட மோதல் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த ஜே.சி.டி.பிரபாகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சம்பவத்தன்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் சென்ற போது பழனிசாமி ஆதரவாளர்கள் உள்ளே செல்ல விடாமல் தடுத்ததாக கூறியுள்ளார். குறிப்பாக பழனிசாமி ஆதரவு மாவட்ட செயலாளர்களான, தியாகராய நகர் சத்யா, விருகை ரவி, ஆதி ராஜாராம் ஆகியவர்கள் கத்தி, பாட்டில் உள்ளிட்ட ஆயுதங்களை வீசி எரிந்து தாக்கியதாகவும், இது தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையும் மனுவில் ஜே.சி.டி.பிரபாகர் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் தாங்கள் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தங்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் மீது மட்டுமே காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் மனுவில் புகார் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை பாதுகாக்கவே, அவற்றை ஓ.பன்னீர்செல்வம் தம்முடைய வாகனத்தில் எடுத்து சென்றதாக ஜே.சி.டி.பிரபாகர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், இதுகுறித்து உள்துறை செயலாளர், டிஜிபி, ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் சிபிசிஐடி போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வருகின்ற 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார். …