திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலைகள் அதிகளவில் இயங்கி வருகிறது. இதற்காக திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து தனியார் நிறுவனங்களின் பணியாளர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் தகுதி சான்று இல்லாமலும் அதிக தொழிலாளர்களை ஏற்றிச் செல்வதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் அவர்களின் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கே.பன்னீர்செல்வம் மற்றும் ஜி.மோகன் ஆகியோர் இணைந்து திருவள்ளூர் பகுதியில் அதிரடியாக தணிக்கை செய்தனர்.அப்போது தனியார் நிறுவனத்திற்காக பயணிகளை ஏற்றிச் செல்லும் நான்கு வாகனங்களையும், அதிக பயணிகளை ஏற்றி, சாலை வரி கட்டாமல், தகுதி சான்று புதுப்பிக்காத வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.மேலும் அதிகமாக சவுடு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரிகள் இரண்டையும் பறிமுதல் செய்து அவர்களிடமிருந்து ரூ 2 லட்சத்து 37 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சாலை வரி , தகுதிச் சான்று பெற்ற பிறகே வாகனங்களை திரும்ப ஒப்படைக்கப்படும் எனவும் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். …