சிதம்பரம், ஜன. 26: பாஜ தலைவர் அண்ணாமலை கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். காட்டுமன்னார் கோவில் பகுதியில் நடை பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று காலை சிதம்பரம் பகுதியில் நடை பயணம் மேற்கொள்ள வந்திருந்தார். நடை பயணம் சீர்காழி சாலையிலிருந்து தொடங்கியது. இந்த நடைபயணம் காரணமாக சிதம்பரம் நகரில் பிரதான சாலையான தெற்கு வீதியில் பேரிகார்டு அமைத்து பொதுமக்களை தடுத்து நிறுத்தினர்.
இதன்காரணமாக மேல வீதி வழியாக செல்லாமல் போலீசார் மாற்றுப்பாதையில் வாகனங்களை அனுப்பி வைத்தனர். இதனால் கடை தெரு பகுதிக்கு செல்லும் பொதுமக்கள், வியாபாரிகள், அலுவலக பணிக்கு செல்பவர்கள், அவசர தேவைக்கு மருத்துவமனைக்கு செல்பவர்கள் உட்பட பல தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நடைபயணத்தால் கீழவீதி, வடக்கு வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.