சேலம், ஜன.6: சேலம் மாவட்டத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் யாத்திரையை கடந்த 3 நாட்களாக நடத்தினார். இதனால் அவரை வரவேற்று பல இடங்களில் கட்சி நிர்வாகிகள், பேனர்களை வைத்துள்ளனர். இதில், சேலம் மாநகர் அன்னதானப்பட்டி 4 ரோடு சந்திப்பு பகுதியில் உரிய அனுமதி ஏதும் இன்றி, பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்று நேற்று முன்தினம் பேனர் வைக்கப்பட்டது. இதனை ரோந்து பணியில் இருந்த அன்னதானப்பட்டி எஸ்ஐ வெற்றிச்செல்வன் பார்த்தார். அந்த பேனரை வைத்த மணியனூர் பொடாரன்காடு சக்திநகரை சேர்ந்த பாஜ பிரமுகர் தியாகராஜன் (49) மீது உரிய அனுமதியின்றி பேனர் வைத்ததாக வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.