புழல்: செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன்(38). இவர் காரனோடை பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். நேற்று வீட்டைப் பூட்டிக்கொண்டு கடைக்கு சென்றார். இந்நிலையில், கிருபாகரனின் தாய் உலகரசி(70) நேற்று காலை வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கிருபாகரனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோவில் வைத்திருந்த 10 சவரன் கொள்ளைபோனது தெரியவந்தது. இதேபோல் சோழவரம் அடுத்த பழைய எருமை வெட்டிபாளையம் பகுதியில் முகால் அம்மன் கோயில் உள்ளது. இங்கு பூசாரியாக லோகநாதன்(70) பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவர் பூஜைகளை முடித்துவிட்டு வழக்கம்போல் வீட்டுக்கு சென்றார். பின்னர், நேற்று மதியம் கோயிலுக்கு வந்தார். அப்போது கோயிலின் கிரில் கேட் உடைக்கப்பட்டு, அம்மன் கழுத்தில் கிடந்த 2 கிராம் தங்க தாலி, ஒலிபெருக்கிகள் கொள்ளைபோனது தெரியவந்தது. புகார்களின்பேரில், செங்குன்றம் மற்றும் சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா மூலம் மர்ம நபர்களை தேடுகின்றனர். …