ஊத்துக்கோட்டை, ஏப். 21: ஊத்துக்கோட்டை அருகே மெய்யூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்துக்கோட்டை அருகே மெய்யூர் கிராமத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்திற்கு குறித்த நேரத்தில் அரசு பேருந்துகள் வருவதில்லை என்றும், கடந்த 3 மாதங்களாக இக்கிராமத்தில் உள்ள மேலவீதி, பண்டார தெரு, ரெட்டி தெரு பகுதிகளில் குடிநீர் சரவர வருவதில்லை என்றும்,
பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுருத்தி நேற்று திருவள்ளூரில் இருந்து மெய்யூர் கிராமத்திற்கு வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருவள்ளூர் பணிமனை கிளை மேலாளர் கிராம மக்களிடம் தொலைபேசி மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதிகூறி சமரசம் செய்தார். அதன் பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.