ராமேஸ்வரம் கோயிலில் அறிமுகம் தீர்த்தமாடும் பக்தர்களுக்கு அடையாள காப்பு கயிறு
கருத்துகள்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் தீர்த்தமாடும் பக்தர்களின் வசதிக்காக, அவர்களின் கைகளில் அடையாள காப்பு கட்டப்படும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்திலேயே முதல்முறையாக கொண்டு வரப்படும் இந்த திட்டத்தை ராமநாத சுவாமி கோயிலில் அமைச்சர் ஆனந்தன் துவக்கி வைத்தார்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தீர்த்தமாடும் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்வது, ஒருமுறை வழங்கப்பட்ட தீர்த்த டிக்கெட்டை மீண்டும் கவுண்டரில் பக்தர்களிடம் தருவது, டிக்கெட்டை மொத்தமாக பெற்று தீர்த்தமாட அனுமதிப்பது போன்ற மோசடி செயல்கள் கடந்த காலங்களில் நடந்தன.இதனால் பக்தர்கள் சந்திக்கும் பிரச்னைகளை தவிர்க்க அறநிலையத்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி, தீர்த்தமாடும் பக்தர்களை அடையாளம் காணும் வகையில் கட்டணம் செலுத்தும் பக்தர்களின் கையில் அடையாள காப்பு (டேக்) அணிவிக்க முடிவு செய்யப்பட்டது.
தமிழகத்திலேயே முதல் முறையாக ஹைடெக் முறையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கைத்தறி துறை அமைச்சர் சுந்தர்ராஜன், கலெக்டர் நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து கோயிலுக்குள் 7 கோடி ரூபாய் செலவில் நடந்து வரும் அன்னதான கூடம் கட்டும் பணி, மூன்றாம் பிரகாரம் வர்ணம் தீட்டும் பணி, கோயில் வடக்கு, தெற்கு கோபுர பணி, பக்தர்கள் தங்குவதற்கான ஓய்வறை கட்டுமான பணி ஆகியவற்றை அமைச்சர் ஆனந் தன் பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ‘13வது நிதி திட்டத்தின் கீழ் 2 கோடி ரூபாய், திருக்கோயில் உபயதாரர் நிதி 5 கோடி ரூபாய் செலவில் கோயிலில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்திலேயே முதல் முறையாக பக்தர்களின் கைகளில் இந்த அடையாள காப்பு அணியும் முறையால் பக்தர்கள் சிரமம் இன்றி புனித நீராடலாம்‘, என்றார்.





















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!