செங்கல்பட்டு அருகே பரபரப்பு
அதிமுக கிளை செயலாளர் கழுத்தறுத்து கொலை
கருத்துகள்
சென்னை : செங்கல்பட்டு அருகே அதிமுக கிளை செயலாளர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். குன்றத்தூர் ஒன்றியம் வைப்பூர் ஊராட்சி வஞ்சிவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (36). அதிமுக கிளை செயலாளர். இவரது மனைவி டில்லியம்மாள், மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக இருந்து வருகிறார். இவர்களுக்கு காயத்ரி என்ற மகளும், காமேஷ், கார்த்திக் என்ற மகன்களும் உள்ளனர்.
கடந்த புதன்கிழமை மதியம் சுரேஷ் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதற்கு பிறகு வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மணிமங்கலம் போலீ சில் டில்லியம்மாள் புகார் செய்தார். சுரேஷின் செல்போன் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
கடைசியாக அவர் பேசிய இடம் சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த ஆப்பூர் செல்போன் டவரை காட்டியது. உடனே உறவினர்களும், போலீசாரும் அப்பகுதியில் தேடினர். அப்போது, தனியார் கம்பெனியின் எதிரே 300 மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் சுரேஷ் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கிடந் தார். உடனே செங்கல்பட்டு டிஎஸ்பி குமார், ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி கண்ணன், இன்ஸ்பெக்டர் மோகன் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். சடலத்தின் அருகே மது பாட்டில்கள், வாட்டர் பாக்கெட், டம்ளர், ஊறுகாய் பாக்கெட் கிடந்தன.
விசாரணையில், சுரேஷும் வஞ்சிவாஞ்சேரியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் ஜெகதீசன், பிரகாஷ், விநாயகம் ஆகியோரும் நெருங்கி பழகியுள்ளனர். இவர்களுடன் 20ம் தேதி மதியம் செரப்பணஞ்சேரி டாஸ் மாக் கடை அருகே சுரேஷ் மது அருந்தியுள்ளார். அதற்கு பிறகுதான் அவர் மாயமாகியுள்ளார். அவரை தேடியபோது இவர்கள் 3 பேரும் தலைமறைவானது தெரிந்தது. மணிமங்கலம் போலீசார் வஞ்சிவாஞ்சேரி பகுதியை சேர்ந்த ஜெகதீசன் (44) என்பவரை நேற்று கைது செய்தனர்.
வஞ்சிவாஞ்சேரியில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ள ஆப்பூர் காட்டில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனால் அவர் முன்விரோதத்தில் கடத்தி கொலை செய்யப்பட்டாரா? ரியல் எஸ்டேட் தொழில்போட்டியில் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.






















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!