மீன் குழம்பு சாப்பாடு தராததால் மனைவி கண் முன் கணவன் கொலை
கருத்துகள்
கீழ்ப்பாக்கம் : அயனாவரம் பட்டாச்சாரியார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (47), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (35), மகன் சரவணன் (11). சீனிவாசனின் நண்பர் விஜயகுமார் என்ற சசி (25), பெயின்டர். சீனிவாசனுக்கு மீன் குழம்பு மீது ரொம்ப பிரியம். வேலை முடிந்து மீனுடன் வருவார். மனைவி சமைத்து கொடுத்ததும் மது குடித்த பிறகு மீன்குழம்பு சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு வீட்டின் அருகே பரசுராமன் தெருவில் உள்ள மீன்பாடி வண்டியில் தூங்குவார்.
நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சீனிவாசன், மீன் வாங்கி சமைக்கும்படி கூறிவிட்டு மீன்பாடி வண்டிக்கு சென்றார். இரவு 11 மணியளவில் சித்ரா சாப்பாடு, மீன்குழம்பை எடுத்துக் கொண்டு கணவன் இருந்த மீன்பாடி வண்டிக்கு சென்றார். சீனிவாசன் சாப்பிட்டபோது அவரை தேடி நண்பர் விஜயகுமார் அங்கு வந்துள்ளார்.
மீன்குழம்பு சாப்பாடு என்பதால் தனக்கும் கொடுக்குமாறு கேட்டுள்ளார். சாப்பாடு போதாது என்று சீனிவாசன் கூறியதால் தகராறு ஏற்பட்டது.
அப்போது சீனிவாசன், விஜயகுமாரின் முதுகில் தட்டியுள்ளார். ஆத்திரமடைந்த விஜயகுமார், நீ உயிருடன் இருந்தால்தானே மீன் குழம்பு சாப்பாடு சாப்பிடுவாய் என்று கூறி சீனிவாசனின் மார்பில் கையால் ஓங்கி குத்தி கீழே தள்ளினார்.
நிலை தடுமாறி விழுந்த சீனிவாசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, அங்கிருந்து விஜயகுமார் ஓடிவிட்டார். துடிதுடித்த சீனிவாசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சீனிவாசன் இறந்தார். புகாரின்படி, அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொளத்தூரில் பதுங்கியிருந்த விஜயகுமாரை நேற்று அதிகாலை கைது செய்தனர்.






















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!