தமிழக சிறப்பு பொருளாதார மண்டலம் மூலம்
கடந்த நிதியாண்டில் ரூ.50,115 கோடிக்கு ஏற்றுமதி
கருத்துகள்
சென்னை : கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் ரூ.50,115 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறையின் கூடுதல் செயலர் மதுசூதன் பிரசாத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஏற்றுமதி, அதிக வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு ''மெப்ஸ்,எஸ்இஇசட்'' என்ற விருதுகளை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. ஐ.டி, பொறியியல், செல்போன், ஜவுளி, மருந்துகள், தோல் பொருட்கள் உட்பட 18 துறைகளில் இருந்து சிறந்து விளங்கிய 54 பேருக்கு மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறையின் கூடுதல் செயலர் மதுசூதன் பிரசாத் விருது வழங்கினார். இதில் தமிழக அரசின் சிப்காட், எல்காட் நிறுவனங்களும் விருதுகளை பெற்றன. விழாவில் அவர் பேசியதாவது:
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதி மிகவும் அவசியமானது. ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் 158 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 34 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. 2011,12 நிதியாண்டில் தமிழகத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் ரூ.50,115 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல.
இதிலும், சென்னை மண்டலத்தின் பங்கு மகத்தானது. இங்கு மட்டுமே 2011,12 ஆண்டில் ரூ.10,688 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 2008,09ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் மந்தமாக இருந்த போதிலும், சென்னை பொருளாதார மண்டலம் 26 சதவீதம் வளர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் ஜிஎஸ்டி சாலை, பெங்களூர் , ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட இடங்கள் தொழிலக சாலைகளாக உள்ளன. முதலீடுகளை கவர தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் இணைந்து செயல்படுகிறது. வாகனம், ஜவுளித்துறை, எலக்ட்ரானிக், டெலிகாம், ஐடி உள்ளிட்ட துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மெப்ஸ் வளர்ச்சி ஆணையர் எ.கே.பாம்பா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசு உயர் அதிகாரிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட தொழில் அதிபர்கள் பங்கேற்றனர்.





















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!