பிரசவத்துக்கு பின் கவனிப்பு அவசியம்
மாற்றம் செய்த நேரம்:3/22/2013 3:11:22 PM
‘உங்களுக்குக் கொழுப்பு அதிகம்...’ இப்படி உங்களைப் பார்த்து யாராவது சொன்னால் கோபப்படுவீர்கள்தானே... ஆனால், அதுதான் உண்மை. இயற்கையாகவே பெண்களுக்கு ஆண்களைவிட உடலில் கொழுப்புச்சத்து கொஞ்சம் அதிகம். கர்ப்ப காலம், குழந்தைப் பிறப்பு போன்ற நிகழ்வுகளுக்குப் பிறகு அது இன்னும் சற்று அதிகரிக்கிறது. குழந்தை பெற்ற முதல் சில வருடங்களுக்குள் தாய் தன்னைப் பராமரித்துக் கொள்ள வேண்டியதும், எகிறிய எடையை உதறித் தள்ளவும் தெரிந்திருக்க வேண்டும். பிரசவத்துக்குப் பிறகு உண்டாகும் ஹார்மோன் மாற்றத்தால், ஒரு பெண் உடலளவிலும், மனதளவிலும் பல நெருக்கடிகளுக்கு உள்ளாகிறாள். எல்லாம் சரியாகி, இயல்பு நிலை திரும்ப 5 முதல் 6 மாதங்கள் ஆகலாம்.
‘குழந்தை பெற்றாகி விட்டது... இனி என்ன இருக்கிறது’ என்கிற அலட்சியம், அந்தப் பெண்ணின் அழகு, ஆரோக்கியம், மனநலம் என எல்லாவற்றையும் சேர்த்துப் பாதிக்கும். பிரசவித்த பெண்ணுக்கான பராமரிப்பை குழந்தை பிறந்த நாள் முதலே தொடங்கலாம். பிரசவித்த முதல் நாள், மல்லாந்து படுத்திருக்க வேண்டும். இரண்டாம் நாள் சற்று ஒருக்களித்துப் படுக்கலாம்.
வெந்தயக் கஞ்சி
என்னென்ன தேவை?
புழுங்கலரிசி - 200 கிராம், வெந்தயம் - 1 கைப்பிடி, மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், தண்ணீர் - 400 மி.லி., உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
அரிசியை நன்கு கழுவி வைக்கவும். தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் கழுவிய அரிசியையும், வெந்தயத்தையும் போட்டுக் கொதிக்க விடவும். கஞ்சி போல வெந்ததும், இறக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து உண்ணவும்.
இந்தக் கஞ்சியை வாரம் 3 நாள் எடுத்துக் கொண்டால், நன்றாக பால் சுரக்கும். உடல் குளிர்ச்சியடையும்.
மூன்றாம் நாள் தலையணைகளை அடுக்கி, சாய்ந்து கொள்ளலாம். 5ம் நாள் உட்காரலாம். 7ம் நாள் சற்று உலாவுவதால், தாய்க்கு மலச்சிக்கல், சிறுநீர்பை கோளாறுகள் தவிர்க்கப்பட்டு, சுறுசுறுப்பாகவும் தெளிவாகவும் இருக்க முடியும். பிரசவத்துக்குப் பின் அதிக ரத்தப்போக்கு இருந்தால், அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, மருத்துவம் செய்ய வேண்டும்.
குழந்தை பிறந்ததும் கடினமான வேலைகளைச் செய்தால், ரத்தப்போக்கு அதிகமாகலாம். பிரசவத்துக்குப் பிறகு கருப்பை சுருங்கி, பழைய நிலையை அடைய 6 வாரங்கள் ஆகும். குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் கருப்பை தன்னிலை அடைந்து, அடிவயிறும் குறையும். குழந்தைக்கும் நன்மை. கருப்பையை சுருங்கச் செய்யும் ‘ஆக்சிடோசின்’ சுரப்பி, பாலூட்டும் காலங்களில் சுரப்பதால், கருப்பை நன்கு சுருங்கும்.
பத்தியக் குழம்பு
என்னென்ன தேவை?
பூண்டு - 1 கைப்பிடி,
ஒன்றிரண்டாக இடித்த மிளகு - 2 டீஸ்பூன், நாட்டுத் தக்காளி - 2, சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி, பச்சை சுண்டைக்காய் அல்லது சுண்டைக்காய் வற்றல் - 1 கைப்பிடி, உப்பு - தேவைக்கேற்ப, தண்ணீர் - 2 டம்ளர், தனியா தூள், மிளகாய் தூள் (இரண்டும் கலந்தது) - 2 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிது, எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
எண்ணெய் காய வைத்து, வெங்காயம், தக்காளி, சுண்டைக்காய், மிளகு, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தனியா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். தீயைக் குறைத்து வைத்து, எண்ணெய் மேலே மிதந்து வரும் போது இறக்கி, கொத்தமல்லி தூவவும்.
* வாரம் இரண்டு முறை இதை சாப்பிட, பிரசவித்த பெண்களின் உடல் வலுப் பெற்று, தாய்ப்பால் நிறைய சுரக்கும்.
வெதுவெதுப்பான வெந்நீர் அல்லது அரிசி கழுவிய தண்ணீரை தினமும் காலையில் அடிவயிற்றில் பாய்ச்ச, கருப்பை பழைய நிலையை அடைந்து, அடிவயிறு சுருங்கும். கருப்பை சுருங்கி, பழைய நிலையை அடையாவிட்டால், உடல் பருமனடைந்து, வயிறு பெருத்து, பெண் பிறப்புறுப்பில் இருந்து, ஒரு வகையான அழுக்கு நீர் வடிந்து கொண்டேயிருக்கும். அடிவயிற்றில் வலி ஏற்பட்டு, முதுகு எலும்பிலும் உளைச்சல் ஏற்பட்டு, கருப்பை இடம் விட்டு, விலகிப் போகும். எனவே, பாலூட்டத் தவறும் தாய்மார்கள், விபரீதத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
தாய்ப்பாலை அதிகரிக்கச் செய்யும் பப்பாளிக்காய், முலாம்பழம், வெட்டிவேர் தண்ணீர், கரும்பு, தண்ணீர்விட்டான் கிழங்கு, வெள்ளைப்பூண்டு, வெந்தயம், சுறா, கருவாடு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும் ‘தண்ணீர்விட்டான் நெய்’ அல்லது சதாவேரி நெய்யை 1 டீஸ்பூன் அளவு, தினமும் 2 வேளை உணவுடன் எடுத்துக் கொள்ள, தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், மார்பகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதே போல பிறப்புறுப்பு சுகாதாரத்திலும் கவனம் அவசியம். பாடி ஸ்பிரே, கிரீம்கள் போன்றவற்றைத் தடவிக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அவற்றிலுள்ள ரசாயனங்கள், பால் குடிக்கிற குழந்தைக்குக் கேடு உண்டாக்கலாம்.
உருளைக்கிழங்கு சட்னி
என்னென்ன தேவை?
உருளைக்கிழங்கு - கால் கிலோ, வெங்காயம் - 2, தக்காளி - 2, பூண்டு - தேவைக்கேற்ப, பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவைக்கேற்ப, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - கால் டீஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க, கொத்தமல்லி - சிறிது.
எப்படிச் செய்வது?
உருளைக்கிழங்கைக் கழுவி, நறுக்கி, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 4 விசில் வைத்து வேக விடவும். வெந்ததும் எடுத்து, உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கடைசியாக கொத்தமல்லி தூவவும்.
பிரசவத்துக்குப் பிறகு பால், கஞ்சி, ரொட்டி, இயற்கை பழச்சாறு, காய்கறிகள், எளிதில் செரிக்கும் கீரைகளை உண்ணலாம். 5ம் நாளில் இருந்து, அரை வேக்காட்டுடைய முட்டை, காய்கறி சூப், எலும்பு சூப், மீன், மாமிசம், பருப்பு வகைகள், அரிசி, கோதுமை உணவுகளை சாப்பிடலாம். காரம், புளிப்பு, உப்பு, துவர்ப்பு சேர்க்கக் கூடாது. குழந்தை பெற்ற 15 நாள்களுக்கு துவர்ப்பான அத்திப்பிஞ்சு, வாழைப்பிஞ்சு, வாழைப்பூ போன்றவை வேண்டாம். முறையாக வெளியேற வேண்டிய பிரசவ அழுக்கை இவை தடை செய்யலாம்.
பிரசவத்துக்குப் பிறகான ஹார்மோன் மாறுபாடு இயல்பு நிலைக்குத் திரும்ப, வைட்டமின் சி, இ மற்றும் இரும்பு மற்றும் புரதச் சத்து நிறைந்த காய்கறி, கீரை, பழங்களை உண்ண வேண்டும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காராமல், நிறைய தண்ணீர் குடித்து, நார்ச்சத்து நிறைந்த காய்கறி, பழங்களை சேர்த்துக் கொள்வதால் மலச்சிக்கல் வராது. இடுப்பு எலும்பு வலுப்பெற, கால்சியம் நிறைந்த பால், பாதாம், பிஸ்தா, மோர், இளநீர், முளைகட்டிய பயறு உண்ணலாம்.
சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள சௌபாக்கிய சுண்டி லேகியத்தை தினம் 2 வேளைகள் 2 முதல் 8 கிராம் அளவு, உணவுக்குப் பின் எடுத்துக் கொள்ள, இடுப்பெலும்பு வலுப்பெறும்.குழந்தை தூங்கும் போது, தானும் தூங்குவது, உடல் அதிராமல் 15 முதல் 20 நிமிடங்கள் நடப்பது, தயங்காமல் தாய்ப்பால் கொடுப்பது, எளிய உடற்பயிற்சிகளைச் செய்வது, ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்பது போன்றவற்றைப் பின்பற்றினாலே, பிரசவத்துக்குப் பிறகும் அழகும் ஆரோக்கியமும் குலையாமல் காக்கலாம். இயற்கை அளித்த இத்தனை விஷயங்களையும் செய்தாலே போதும்... ஜிம் போகாமலேயே ‘ஜம்’மென மாறும் உங்கள் உடல்!






















