‘காட்டு நாயக்கன்’ சான்றிதழ் கேட்டு ஆர்டிஓ அலுவலகத்தை சாமக்கோடாங்கிகள் முற்றுகை
பதிவு செய்த நேரம்:2013-03-23 10:55:29தா.பேட்டை, : ‘காட்டு நாயக்கன்‘ என சாதி சான்றிதழ் வழங்கக்கோரி முசிறி ஆர்டிஓ அலுவலகத்தை சாமக்கோடாங்கிகள் குடும்பத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், தொட்டியம் வடக்கு அரங்கூர் கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இரவு நேரங்களில் குடுகுடுப்பை அடித்து குறிசொல்லி பகலில் யாசகம் பெற்று வாழ்கை நடத்தும் காட்டுநாயக்கன் இனத்தை சேர்ந்த சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். அரங்கூர் கிராமத்தில் 7 குடும்பங்களாக வாழ்க்கையை துவங்கியவர்கள் தற்பொழுது 350 குடும்பங்களாக வசிக்கின்றனர். இவர்களது மூதாதையர்கள் கோவை மாவட்டம், உடுமலைபேட்டை பகுதியில் அமைந்துள்ள தளிஞ்சிக்காடு மலைக்குன்று மற்றும் காடுகளில் வசித்ததாக கூறப்படுகிறது.
தற்போது தமிழக அரசால் இச்சமுதாய மக்களுக்கு ராஜகம்பளம் என்ற பெயரில் ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், காட்டு நாயக்கன் என்று சாதி சான்றிதழ் தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் ராஜகம்பளம் என்ற பிரிவினருக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. போதிய கல்வி அறிவு இல்லாத காரணத்தால் தவறாக பெற்ற சாதி சான்றிதழ் எங்கள் வம்சத்தினரின் வளர்ச்சிக்கு உதவாத நிலையாக உள்ளது. எனவே, எங்களுக்கு காட்டு நாயக்கன் என்று சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கூறி ஆர்டிஓ அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு ஆர்டிஓ முஸ்தபா கமால் பாட்ஷாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுமீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியதையடுத்து முற்றுகை கைவிடப்பட்டது.
இதுகுறித்து அச்சமூகத்தை சேர்ந்த அறிவழகன் கூறுகையில், எங்கள் சமுதாயத்தினருக்கு ராஜகம்பளம் என்று சான்றிதழ் வழங்குவதால் அரசின் எவ்வித சலுகையும் பெறமுடிவதில்லை. சமுதாயத்தின் அடிமட்டத்தில் ஏழ்மை நிலையில் வாழும் எங்களுக்கு காட்டு நாயக்கன் என்ற சான்றிதழ் வழங்க வேண்டும். எங்கள் மூதாதையர்கள் காட்டு நாயக்கன் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எனவே தமிழக அரசும், திருச்சி கலெக்டரும் எங்கள் எதிர்கால சந்ததியினரின் நலனை கருத்தில் கொண்டு எங்க சமுதாயத்திற்குரிய சாதிச்சான்றிதழை வழங்கவேண்டும் என்று கூறினார். கடந்த வாரம் ஆர்டிஓவை சந்தித்து இதே சமுதாயத்தினர் சாதிச்சான்றிதழ் கேட்டு மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.










