ஜாதகத்தில் சூரியன், சந்திரன் இருவருமே பலமாக இருக்கிறார்கள்!
கருத்துகள்
என் கணவர் காலமாகி நான்கு மாதம் ஆகிறது. அவர் பார்த்துக்கொண்டிருந்த வேலை என் மகளுக்கு கிடைக்குமா? நிறைய கடன் சுமையால் அவஸ்தைப்படுகிறோம். வழி கூறுங்கள். கே.விமலா, திருச்சி.
உங்கள் மகளின் செயல்களில் புயல் வேகம் இருக்கும், நீர், நெருப்பு போன்ற இடங்களில் ஜாக்கிரதை தேவை. சண்டை போடாமலும் கலகங்களிலும் ஈடுபடாமலும் அவள் செயல்பட வேண்டும். ஸ்போர்ட்ஸ் மெட்டீரியல், ஆடம்பர பொருட்கள், மரச் சாமான்கள், இசைக் கருவிகள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தகப்பனாருடைய வேலையும் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். வளர்பிறை சஷ்டி அன்று கீழேயுள்ள இந்தப் பாடலை ஒன்பது தடவை உங்கள் மகளை பாடச் சொல்லுங்கள். வேலை சிறப்பாக அமையும்.
பாலாதீதாம் பானு கோடி ப்ரகாசாம்
மூலாதாராம் போரு ஹஸ்தாம் மஹேசீம்
பாலாம் சுப்ராம் பங்கஜா க்ஷீம்ச வரதாம்
தேவீம் நித்யாம் ஸந்ததம் பாவயாமி
நான் சிறு மளிகைக் கடை வைத்துள்ளேன். என் வியாபாரம் செழிக்கவும் உடல் ஆரோக்கியமாக இருக்கவும் வழி கூறுங்கள். எஸ்.பழனியப்பன், கே.புதுப்பட்டி.
சூரியன் ஓய்வெடுத்ததாக வரலாறு உண்டா? அதுபோல 55 வயதைக் கடந்த நீங்கள் சுறுசுறுப்பை மூலதனமாக்கி உழைக்க வேண்டும். சந்திரன், கேது இணைந்திருந்த சமயத்தில் உங்கள் பிறப்பு நிகழ்ந்துள்ளதால், சனிக்கிழமையன்று அருகாமையிலுள்ள மாரியம்மன் கோயில் அல்லது உக்கிரமான அம்மன் கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்துங்கள். கீழேயுள்ள ஸ்லோகங்களை தினமும் 33 முறை கூறுங்கள்.
ஸோம தேவ மஹா பாக பகவன்
பக்திவத்ஸவ
த்வாம் நமாமி மமாசேஷம் ருணம் ஆசு
வினாசய ருணரோகாதி தாரித்ரியம்
யேசாந்யே ஹி அபம்ருத்யவ: பய
க்லேச மனஸ்தாபா: நிச்யந்து மம
எனக்கு 28 வயதாகிறது. காவல்துறையில் பணிபுரிந்து வருகிறேன். இன்னும் திருமணம் ஆகவில்லை. தட்டிக் கொண்டே போகிறது. எப்போது திருமணம் நடக்கும்? எம்.தேவி.
உங்கள் பணி மிகவும் உயர்ந்தது. தண்டனை பெற வேண்டியவர்களைக் கண்டுபிடித்து கொடுப்பதற்கு படிப்பு மட்டும் போதாது. நுண்ணிய அறிவும் தேவை. மேலும், தவறான வழிகளில் தடம் மாறி ஓடும்போது சுவரில் எறிந்த பந்துபோல் உங்களிடமே பிரச்னைகள் திரும்புவதும் உண்டு. தற்போது ராகுவும் சந்திரனும் உங்களை வழி நடத்துகிறார்கள். 2013ம் ஆண்டின் முடிவில் ராகு முழுமையாக உங்கள் ராசியை விட்டு விலகுவதாலும் கேது 6ல் நுழைவதாலும் திருமணம் கைகூடிவிடும். காதல் விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். ஹார்மோன் கோளாறுகள் வரக்கூடும். மருத்துவரை அணுகுங்கள். வாய் பேச இயலாதவர்களுக்கு லுங்கி, பப்பாளி பழம், புளி சாதத்தை தானமாக வழங்குங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தை செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் 21 முறை துர்க்கை சந்நதியில் அமர்ந்து சொல்லுங்கள்.
பயேப்ய: த்ராஹி நோ தேவி
துர்க்கே தேவி நமோஸ்துதே
எனக்கு 15.11.2012 அன்று மாலை நான்கு மணி அளவில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. என்ன பெயர் வைக்கலாம்? குழந்தையின் எதிர்காலம் பற்றி கூறுங்கள். டி.இராகவன், கிருஷ்ணகிரி.
இன்னுமா நீங்கள் பெயர் வைக்கவில்லை? அப்படியெனில் ஐயப்பன் பெயரான அஜரன், அனுஜன், ஜகத்ரட்சகன் போன்ற பெயரைச் சூட்டலாம். புத்தக தொழில், விஞ்ஞானத் துறை, வானிலை ஆராய்ச்சி அல்லது தொலைக்காட்சி துறையில் உங்கள் மகன் பளிச்சிடுவான். அரசுத் துறையில் வேலை கிடைப்பது நிச்சயம். சனிக்கிழமையன்று விடாமல் எண்ணெய் தேய்த்துக் குளியுங்கள். தற்சமயம் சளிக் கட்டு, ஜலதோஷம், ஜுரம் இவை அவனை நெருங்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். இவனுக்காக ஐயப்பன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடத்திக் கொண்டு வாருங்கள். உங்கள் மகன் பேச ஆரம்பித்ததும் ‘ஓம் சபரி கிரீசாய நமஹ’ என்று சொல்லச் சொல்லுங்கள். பெங்களூரிலுள்ள ஜோதிட வல்லுநரான சுந்தரேசன் என்பவரிடம் ஜாதகத்தை கணித்துக் கொள்ளுங்கள். அவருடைய தொலைபேசி எண்: 080-23391458.
எங்களுக்குத் திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகின்றன. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. மிகுந்த மனவேதனையோடு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நல்ல வாரிசு பெற பரிகாரம் கூறுங்கள். கே.அய்யாவு, பெரிய மணலி.
முன்பிறவி பாவங்களால் குழந்தை பாக்கியம் தடைபடுவதை நான் பலமுறை கூறியுள்ளேன். தனது வாழ்வில் ஒரு தவறுகூட செய்யாமல் வாழ்கிறேன் என்று யாருமே மார்தட்டிக் கொள்ள முடியாது. உங்கள் மனைவிக்கு கிருமிகளால், கரு கலைக்கப்படுகின்றது. உங்கள் ஜாதகத்திலும் புத்திரனை கொடுக்கும் சனிபகவான் ஒன்பதாம் இடத்தில் சத்ரு வீட்டில் சென்று அமர்ந்துள்ளான். தஞ்சையிலிருந்து திருவாரூர் பேருந்து தடத்தில் கொரடாச்சேரி அருகாமையிலுள்ள பத்தூர் என்ற இடத்தில் ஆவெடுத்தாள் என்றொரு அம்மன், தாமரைகுளக் கரையில் அருள்பாலிக்கிறாள். அந்த ஆலயத்திற்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தி புளிசாதம் படைத்து அனைவருக்கும் விநியோகம் செய்யுங்கள். தோஷம் விலகி வாரிசு கிடைக்கும்.
எனக்கு வறுமையே வாழ்க்கை என்றாகி விட்டது. வருமானத்திற்கு மீறிய செலவுகள் ஏற்படுகின்றது. இதிலிருந்து மீளுவதற்கு உபாயம் கூறுங்கள். எம். குமரன், அரக்கோணம்.
உங்கள் ஜாதகத்திலேயே ராகு அசுபத் தன்மை பெற்றிருக்கிறார். இதனால் பலன்களும் அப்படியேதான் உள்ளன. உங்கள் பெயரின் கூட்டுத்தொகை 25 ஆக உள்ளது. இதுவும் கேதுவும் ஆதிக்கத்தைத்தான் காட்டுகிறது. வாழ்க்கையில் பல்வேறு மேடு பள்ளங்களைக் கடந்து ஐம்பது வயதைத் தாண்டி விட்டீர்கள். நீங்கள் அத்தியாவசிய தேவைகளைத் தவிர பிற வசதிகள் அனைத்தையும் புறக்கணித்துவிடுங்கள். பிறகு திருமகள் தானாக உங்கள் இல்லத்தில் நிலைத்து விடுவாள். கீழேயுள்ள ஸ்லோகத்தை வடமொழி அறிந்தவர்களிடம் கற்றுக் கொண்டு தினமும் 33 முறை சொல்லுங்கள். பெருமாள் கோயில் ஆலய தாயாரிடம் அமர்ந்து இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.
‘‘தத்யாத் தயானுபவனோ த்ரவிணாம்
புதாராம்
அஸ்மின் னகிஞ்சன் விஹௌம் கசிசௌ
விஷண்ணே!
துஷ்கர்ம கர்ம கமநீய சிராய தூரம்
நாராயண ப்ரணயினீ நயனாம்புவாஹ’’
எனக்கு கடந்த ஆறு மாதங்களாக கழுத்து, இடது தோள் போன்றவற்றில் பொறுக்க முடியாத அளவுக்கு வலி உள்ளது. கழுத்து எலும்பு, தண்டுவடத்தை அழுத்துகிறது என்கிறார், மருத்துவர். ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்றும் வேண்டாம் என்றும் மருத்துவர்கள் இருவேறு அபிப்ராயங்களைத் தெரிவிக்கிறார்கள். என்ன செய்வது? என்.ஜெயந்தி, ஆற்காடு.
கேது பகவான் ரத்த ஓட்டத்தை தடை செய்யக்கூடியவர். நீங்கள் மாலைச் சூரிய ஒளியில் நனைவது நல்லது. இதனால் அனைத்து பிணிகளும் பொசுங்கிப் போகும் என்று வைத்திய சாஸ்திரம் கூறுகிறது. இது கங்கையில் நீராடுவற்கு சமமானதாகும். திருவோண நட்சத்திரத்தில் பிறந்துள்ளீர்கள். குளிர்ச்சி பொருந்திய சரீரமாகையால் இஞ்சி, தாமரை வேர், துளசி வேரை நீரில் கொதிக்க வைத்து வலியுள்ள இடத்தில் பற்று போடுங்கள். சபரி கிரீசன் ஐயப்பன் கோயிலுக்குச் சென்றோ வீட்டில் படத்தை அலங்கரித்து வைத்தோ தினமும் கீழ்க்காணும் ஸ்லோகத்தை 25 முறை கூறுங்கள்.
பவபயாபஹம் பாவுகாவுகம் புவன
மோகனம்
பூதிபூஷணம் தவளவாகனம் திவ்யவா
ரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே!
நான் 1.9.1936ல் பிறந்தேன். சதய நட்சத்திரம். மனதில் அமைதி இல்லை. என்ன செய்ய வேண்டும்? ஜி.வெங்கட்ராமன், மும்பை.
எழுபத்தாறு வயதான உங்களுடைய ஜாதகத்தில் சூரியன், சந்திரன் இருவருமே பலமாக அமைந்திருக்கிறார்கள். அதனால், நுண்ணிய அறிவாளியாகவும் வாழ்ந்திருக்கிறீர்கள். வெள்ளரிப் பழம், தன் பிணைப்பைக் கொடியிலிருந்து தானாக விடுவது போல குடும்பப் பற்றை குறைக்க மனக்குதிரையின் கடிவாளங்களை இழுத்துப் பிடியுங்கள். தேவையில்லாத குழப்பங்களையும், கவலைகளையும் ஆசைகளையும் அறவே விட்டுவிடுங்கள். மும்பை, முலுண்டு பகுதியில் ஒரு பக்த சங்கம் உள்ளது. அங்கு சொற்பொழிவெல்லாம் நடத்துகிறார்கள். அங்கே குருவாயூரப்பன் ஆலயம் ஒன்றும் அமைந்துள்ளது அங்கு சென்று வாருங்கள். கீழேயுள்ள பாடலை, வியாழக்கிழமையன்றும் மற்றும் ஒவ்வொரு மாதமும் 12ம் தேதியன்றும் 12 தடவை பாடுங்கள்.
மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன், நதியோடு
கொன்றை மாலை முடிமேல் அணிந்து
என் உளமே புகுந்த அதனால் கொதியுறு
காலன் அங்கு நமநோடு தூதர் கொடு
நோய்கள் ஆன பலவும் அதிகுணம்
நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
பிரம்மஸ்ரீ என்.வைத்யநாத தீட்சிதர்
வாசகர்கள் தங்கள் பிரச்னைகளை தினகரன் ஆன்மிக மலர், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். பரிகாரம் கேட்பவர்கள் கண்டிப்பாக தம் பெயர் / பிறந்த தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.


























முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!